விடுப்பு, சம்பளம் மறுப்பு: வங்கி மேலாளருக்கு ஏற்பட்ட கதி!
காஜியாபாத் வங்கியில் மேலாளருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்...
லக்னௌவின் காஜியாபாத்தில் உள்ள ஒரு வங்கியில் விடுப்பு, சம்பளம் தொடர்பான பிரச்னைகளால் வங்கி மேலாளரை பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக லோனி எல்லைப் பகுதி காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில்,
லோனி கிளையின் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வருபவர் 34 வயது அபிஷேக் குமார். இவர் பாட்னாவைச் சேர்ந்தவர்.
2025 முதல் காஜியாபாத்தில் உள்ள வங்கியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதே வங்கியில் பாதுகாப்பு ஊழியராக ரவீந்திர ஹூடா (50), அவருக்குத் துணையாக ஷிஷுபால் (57) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக ரவீந்திர ஹூடாவுக்கு விடுப்பு கேட்டபோதெல்லாம் மறுக்கப்பட்டதாகவும், சம்பளம் குறைக்கப்படதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவருக்கும் வங்கி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாதுகாவலர் ரவீந்திர ஹூடா வங்கி மேலாளரைத் தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவம் நடந்தபோது ஷிஷுபால் அவருடன் இருந்துள்ளார்.
இதையடுத்து, காயமடைந்த வங்கி மேலாளர் சிகிச்சைக்காகத் தில்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாவலர்கள் ரவீந்திர ஹூடா மற்றும் ஷிஷுபால் ஆகிய இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் பாக்வத் மாவட்டத்தில் உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.