ஆன்லைன் சலான் மோசடி: பணத்தை இழந்த ஜனசேனா எம்.எல்.ஏ.!
ஆன்லைன் சலான் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ. பற்றி...
ஆன்லைன் சலான் செயலி மோசடியில் சிக்கி ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் பணத்தை இழந்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் பொலாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பலராஜு. இவரது தொலைபேசிக்கு கடந்த மார்ச் 6 அன்று அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து மோசடி இணைப்புச் செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து துறையின் பெயரில் வந்த இணைப்பை க்ளிக் செய்தபோது, சாலைப் போக்குவரத்து ஆணையத்தின் சலான் செயலி ஒன்றை போனில் பதிவிறக்க அறிவிப்பு வந்துள்ளது. அவர் அந்தச் செயலி போலியானது என்பது தெரியாமல் தனது போனில் பதிவிறக்கம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து மோசடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 12 லட்சம் வரை திருடப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ பலராஜு தேசிய சைபர் கிரைம் முகமையில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புகார் அங்குள்ள காவல்நிலையத்திற்கு நேற்று (மார்ச் 21) அன்று அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதுதொடர்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 318 (4) மற்றும் 66 (டி) -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் உள்ள ஏடிஎம்-ல் குற்றவாளிகள் பணத்தை எடுத்திருப்பதாக வங்கி பரிவர்த்தனைகளைக் கண்காணித்த காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த இணைய மோசடியில், சர்வதேச தொடர்புகள் கொண்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த கும்பலின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பதாகவும் அவர்கள் கூறினர்.
சட்டப்பேரவை உறுப்பினரே இதுபோன்ற மோசடியில் பணத்தை இழந்திருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.