முகப்பு
இந்தியா

தமிழ் எழுத்தாளர்களுக்கு புதிய விருது, ரூ.1 கோடி பரிசு: எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு

ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.

Updated On : 26 மார்ச் 2026, 3:39 am IST
புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது அறிமுக நிகழ்ச்சியில் வாழும் தமிழ் அறக்கட்டளையைச் சேர்ந்த (இடமிருந்து) எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் சரண்யா ரமேஷ், பிரியம்வதா, சுனீல் கிருஷ்ணன், ஜெயமோகன், சுசித்ரா, பார்கவி, லோகமாதேவி.
பகிர்:

நமது நிருபர்

ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.

"உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதை' அறிமுகப்படுத்தும் விழா புது தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது:

Advertisement

Advertisement

நமது இலக்கிய மதிப்புகளை தேசிய மற்றும் உலக அரங்கில் நிலைநிறுத்தும் பொருட்டு, வாழும் தமிழ் அறக்கட்டளையாகிய நாங்கள், "உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருது' என்ற விருதை நிறுவுகிறோம். இந்த விருதின் மூலம் அழகியலை முன்னிறுத்தும் ஓர் இலக்கியப் பார்வையை நாங்கள் வெளிப்படுத்துவோம். அதை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான எழுத்தாளர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளோம்.

இந்த விருதின் மூலம், இலக்கியத்திற்கான சில மதிப்பீட்டு அளவுகோல்களை நிறுவ நாங்கள் முயல்கிறோம். எளிமையான அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதே சிறந்த இலக்கியம் என்று நம்பப்படும் ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம். இலக்கிய உணர்வு இல்லாதவர்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் இந்தக் கண்ணோட்டத்தை நிறுவனமயமாக்கி, அதன்மூலம் இலக்கியத் துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். எழுத்தாளர்களாகவும் வாசகர்களாகவும், இந்தப் போக்கிற்கு எதிராகக் குரல் எழுப்ப நாங்கள் விரும்புகிறோம்.

சுமார் 6 நாடுகளைச் சேர்ந்த தமிழ் இலக்கிய வாசகர்களின் ஆதரவுடன் இந்த விருதை நாங்கள் நிறுவுகிறோம். இந்த விருதுக்கான நடுவர் குழுவில் தமிழ் வாசகர்களும் எழுத்தாளர்களும் இடம்பெறுவார்கள்.

இந்திய மற்றும் உலக அளவில் படைப்பிலக்கியத் துறையின் முன்னணிப் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, முன்னிலைப்படுத்தி, கெüரவிப்பதே இந்த விருதின் நோக்கம். இது ஏதோ ஒரு தனி அமைப்பால் வழங்கப்படும் விருது மட்டுமல்ல; இதன் பின்னணியில், நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட ஓர் அறிவுசார் இயக்கம் உள்ளது.

புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், எம். வேதசகாயகுமார் போன்ற ஆளுமைகள் வழியாகத் தொடரும் ஒரு செழுமையான நவீன இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்கு உண்டு. அந்த அறிவுசார் சூழலிலிருந்தே இவ்விருது உருப்பெற்று வருகிறது. மேலும், ஏப்ரல் 3, 4 தேதிகளில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் "வாழும் தமிழ் இலக்கிய விழா' நடைபெறும் என்றார் ஜெயமோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.