புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 40% புகை பிடிக்காதோர்: காற்று மாசுபாட்டைக் குறைக்க பாஜக எம்.பி. வலியுறுத்தல்
புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 40% புகை பிடிக்காதோர் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி. ஜெசங்பாய் தேசாய் தகவல்
புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 40 சதவிகிதத்தினருக்கு காற்று மாசுதான் காரணம் என பாஜக எம்.பி. ஜெசங்பாய் தேசாய் கூறியுள்ளார்.
நாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி, மாநிலங்களவையில் குஜராத் பாஜக எம்.பி. ஜெசங்பாய் தேசாய் பேசுகையில், "நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 40 சதவிகிதத்தினர் புகை பிடிக்காதவர்கள் என்று எய்ம்ஸ் கூறுகிறது. இதன் முக்கிய காரணம் காற்று மாசு மட்டுமே.
விரைவான நகரமயமாக்கல், தொழில்துறை விரிவாக்கம், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை காற்றின் தரத்தில் தொடர்ச்சியான சரிவை ஏற்படுத்துகின்றன; பொது சுகாதாரத்தில் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன.
சுமார் 3,200 பேரியம் காற்று மாசு - புற்றுநோய் தொடர்பு குறித்து எய்ம்ஸ் விரிவான ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
நுரையீரல் புற்றுநோயைக் கையாள்வதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது, தாமதமாக நோயறிதலே. பெரும்பாலும் நோய்முதிர்விலேயே கண்டறியப்படுகிறது.
இதன் விளைவாக, சுமார் 70 சதவிகித நோயாளிகள், பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரு வருடத்துக்குள்ளாகவே இறக்கின்றனர். இது நமது சுகாதார அமைப்பின் தயார்நிலை மற்றும் பொது விழிப்புணர்வு குறித்து தெளிவுபடுத்துகிறது.
காற்று மாசுபாட்டைக் குறைத்துக் கட்டுப்படுத்தவும், நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான இலக்கு, பொது விழிப்புணர்வு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.