இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலையால் தவித்து வருகின்றது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகள் ஆண்டுக்குச் சுமார் 37.5 பில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என்ற தகவல் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான எச்சரிக்கைகளை அதிகரித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நீர் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்தத் துறைகளில் மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அறக்கட்டளையான நாட்கனெக்ட்-ன் தலைவர் பி.என். குமார் பிரதமர் அலுவலகத்துக்குக் கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், “ஏஐ தொழில்நுட்பச் செயல்பாட்டுக்குத் தேவையான 1 ஆண்டிற்கான தண்ணீர் பயன்பாடு, சுமார் 7 முதல் 8 லட்சம் மக்களின் ஓர் ஆண்டுக்கான நீர் தேவைக்குச் சமமானது அல்லது மும்பை போன்ற ஒரு பெருநகரத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அளவு நீரைக் கொண்டது” என்று தெரிவித்திருந்தார்.
மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு நிர்ணயித்த கணக்கின்கீழ் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் தேவை என்ற நகர்ப்புற நீர் விதிமுறையின்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் ஷம்பு நாத் குப்தா அளித்த பதிலில், ”இந்தியாவில் தரவு மையங்களின் (டேட்டா சென்டர்) திறன் 2020-ல் 375 மெகாவாட்டிலிருந்து 2025-ல் 1500 மெகாவாட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
நீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க, தரவு மையங்கள் தற்போது மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்துகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் டிஜிட்டல் முறையில் நிலத்தடி நீர் கண்காணிப்பு போன்ற நீர்வளத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.