3 முதல்வர்கள்: எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளும் தோல்வி வித்தியாசமும்!
மு.க. ஸ்டாலின், மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றது பற்றி...
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, தில்லியில் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் ஆட்சியை இழந்ததுடன் தங்கள் தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இவர்களின் தோல்வி வாக்கு வித்தியாசத்தைவிட எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தவெக, அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்கத்தில் பாஜக, கேரளத்தில் காங்கிரஸ், புதுவையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராததாக இருந்தாலும், இதில் கேரளத்தில் பினராயி விஜயன் மட்டும் தப்பிக்க, தமிழகத்தில் மு.க. ஸ்டாலின், மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜியின் தோல்வி மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Advertisement
Advertisement
இவர்களின் தொகுதிகளில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் நீக்கப்பட்ட வாக்குகள், அவர்கள் தோற்பதற்குக் காரணமான வாக்கு வித்தியாசத்தைவிட அதிகமாகும். அதாவது வாக்கு வித்தியாசத்தைவிட நீக்கப்பட்ட வாக்குகள் அதிகம்.
மு.க. ஸ்டாலின்
2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 74,202. தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 8,795.
ஆனால் கொளத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 1.02 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 14.36 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
மமதா பானர்ஜி
மேற்குவங்கத்தில் கடந்த முறை நந்திகிராம், பவானிபூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி இம்முறை பவானிபூரில் மட்டுமே போட்டியிட்டார். முதலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் இருந்த அவர், இறுதியாக தோல்வியைத் தழுவினார்.
பவானிபூரில் மமதா பெற்ற வாக்குகள் - 58,812, பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 15,105.
பவானிபூர் தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 51,000. இவர்களில் 23.3% முஸ்லீம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
கேஜரிவால்
இதேபோல 2025 பிப்ரவரி மாதம் நடந்த தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தலில் புதுதில்லி தொகுதியில் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் சிங்(30,088)கிடம் தோல்வியைத் தழுவினார் கேஜரிவால் (25,999 வாக்குகள்).
புதுதில்லி தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 37,558 ஆகும்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் 3 முக்கிய முதல்வர்கள் தங்கள் ஆட்சியை இழந்ததுடன் தங்கள் பேரவைத் தொகுதிகளில் தோல்வியுற்றது வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியை இழந்தாலும் தனது தர்மடம் தொகுதியில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றார்.
MK stalin, Mamata, kejriwal 3 Chief Ministers: Votes Excluded from SIR and Margin of Defeat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.