நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!
நாசிக் டிசிஎஸ் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டவர் கைது...
மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள டிசிஎஸ்சி நிறுவனத்தின் கிளையில் பணிபுரியும் பெண் ஊழியரான நிதா கான் சத்ரபதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகக் கடந்த பிப்ரவரி மாதத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து உண்மை நிலவரத்தைக் கண்டறிய நாசிக் போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், மலேசியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகர் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் கைதான டீம் லிடர்கள் சக ஊழியர்களைச் சிறுபான்மையினர் நடைமுறைகளை பின்பற்றும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட டிசிஎஸ் மேலாளரான நிதா கான் தலைமறைவானார்.
Advertisement
கடந்த 2021ல் டிசிஎஸ் நிறுவனத்தில் பிபிஓ பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார் நிதா கான். பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் தொடர்பான புகார்கள் குறித்து போலீஸார் நடத்தப்பட்ட விசாரணையில் நிதா கான் முக்கிய குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.
இதனிடையே, டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அவர், 5 நாள்களாக தலைமறைவாக இருந்துவந்தார்.
சத்ரபதி சம்பாஜிநகர் நகரக் காவல் தலைவர் பிரவீன் பவார் தலைமையில், குற்றப்பிரிவு குழு ஒன்று கடந்த சில நாள்களாக நிதா கானின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தது. இதனிடையே, வியாழக்கிழமை சத்ரபதி சம்பாஜிநகரில் நிதா கான் கைது செய்யப்பட்டதாக நாசிக் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக் தெரிவித்தார்.
யார் இந்த நிதா கான்?
புணே பல்கலையில் பயின்ற நிதா கான், நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்தார். குறிப்பாக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள புகார் குழுவில் உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.
சக ஊழியர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பல பெண் ஊழியர்கள் அவரிடம் முறையிட்டபோதும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், மத ரீதியான அழுத்தங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில், நிதா கான் மீது மிரட்டல் விடுத்தல், பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. நாசிக்கில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.