ரூ.100 கோடி ஆன்லைன் கல்வி நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?
ரூ.100 கோடி மதிப்பிலான ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடுவதாக அங்குர் வாரிகூ அறிவிப்பு
2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆன்லைன் மூலம் கல்வியை அளிக்கும் நிறுவனமான வெப்வேதாவை மூடுவதாக அதன் தொழிலதிபர் அன்குர் வாரிகூ அறிவித்துள்ளார்.
ரூ.100 கோடி மதிப்புள்ள ஆன்லைன் கோர்ஸ் பிசினஸை, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக மூடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாரிகூ, இந்த வெப்வேதாவைத் தொடங்கி இதுவரை ரூ.100 கோடிக்கு அதிகமாக விற்பனை செய்திருப்பதாகவும், இதுவரை ரூ.25 கோடி வரை நிறுவனம் லாபம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
Advertisement
ஆனால், செயற்கை நுண்ணறிவு காரணமாக, டிஜிட்டல் கல்வியின் அடிப்படை வெகுவாக மாறியிருப்பதாகவும், அது நேரடியாகவே இதுபோன்ற ஆன்லைன் கோர்ஸ் போன்ற கல்வி தொழில்நுட்பச் சேவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது EdTech எனப்படும் கல்வி தொழில்நுட்பச் சந்தையானது பெரிய மாற்றத்தை சந்திக்கும் நிலைக்கு வந்துள்ளது. ஏற்கனவே, பைஜூஸ் போன்ற முன்னணி பயிற்சி நிறுவனங்களே நிதி நெருக்கடி போன்றவற்றை சந்தித்து மூடப்பட்ட நிலையில், செய்யறிவு காரணமாக தற்போது ஒரு ஆன்லைன் கோர்ஸ் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
வெறும் அடிப்படைத் தகவல்களை வழங்கும் ஆன்லைன் படிப்புகளைவிடவும், செய்யறிவில் இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ தகவல்கள் கிடைப்பதுதான், தொழில் நிறுவனம் மூடப்பட முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது கல்வி தொழில்நுட்பத் துறையில் பல்வேறு நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வந்தாலும், தனது தொழிலை விரிவுபடுத்தப்போதுமான வளம் இல்லாமல் இருப்பதே வாரிகூ நிறுவனத்தை மூடக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நிறுவனத்தை மூடுவது தொடர்பான தன்னுடைய விரிவான விளக்கத்தையும் எதிர்காலத்திட்டங்களையும் விரைவில் வெளியிடுவதாக வாரிகூ அறிவித்துள்ளார்.