திருமணம் செய்து கொள்ள வேண்டாம்! மரணமடைந்த நொய்டா பெண் கடைசி மெசேஜ்
திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என மரணம் அடைந்த நொய்டா பெண் தோழிக்கு அனுப்பிய கடைசி மெசேஜ் பரபரப்பை ஏற்படுத்தியது.
நொய்டாவைச் சேர்ந்த திவிஷா ஷர்மா என்ற பெண் போபாலைச் சேர்ந்த வழக்குரைஞரைத் திருமணம் செய்து 2 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சந்தேகமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
வழக்குரைஞர்கள், நீதிபதிகளைக் கொண்ட குடும்பத்தில் திருமணமாகிச் சென்ற பெண் தூக்கிட்ட நிலையில் மே 12ஆம் தேதி இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது கொலைதான் என பெண்ணின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன், நீங்களும் என்னைப் போல மாட்டிக்கொள்ள வேண்டாம், என்னால் அதிகம் பேச முடியாது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன் என்று திவிஷா ஷர்மா என்ற பெண் தன்னுடைய தோழிக்கு அனுப்பிய கடைசி தகவலில் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் வீட்டு முன்பு, பெண்ணின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரிந்தபிறகே அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வோம் என்று கூறி அவர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
திருமணமாகி இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் திவிஷா சர்மாவுக்கு, கணவர் வீட்டார் கடுமையாக துன்புறுத்தல்களை செய்து வந்ததாகவும் அவர்கள் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களாக இருப்பதால் விசாரணையில் குறுக்கீடு இருக்கும் என தாங்கள் கருதுவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறுகிறார்கள்.
தங்களது மகளின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் மரணம் நிகழ்ந்து 2 நாள்களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
முன்னாள் புணே அழகியான திவிஷா, 2024ஆம் ஆண்டு டேட்டிங் ஆப் மூலம் சமர்த் சிங் என்ற வழக்குரைஞரை காதலைத்து கடந்த 2025 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். குடும்ப வன்முறை காரணமாக பெற்றோர் வீட்டுக்குத் திரும்ப நினைத்திருந்த நிலையில் அவர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.