கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் துணிக் கடையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது
நானும் ரௌடிதான் பாணியில் பொது இடத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் கைது...
ஜாம்ஷெட்பூர் : துணிக் கடையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் காவல் துறை அதிகாரிகளால் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கடந்த மே15-ஆம் தேதி ஆயுதங்களுடன் காரில் சென்ற ஒரு கும்பல், அந்நகரில் இருந்த துணிக் கடையொன்றில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இது குறித்து, கடந்த மே 17-இல் வழக்கு பதியப்பட்டு ஜார்க்கண்ட் காவல் துறை துணை காவல் ஆணையர் (சட்டம் - ஒழுங்கு) தாஃகிர் ஆலம் தலைமையில் சிறப்புக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், மேற்கண்ட குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதன் பின்னணியை விசாரித்ததில் வெறுமனே பெயரளவிலோரிரு கோரிக்கைகளை வலியுறுத்தி அவற்றை நிறைவேற்றவில்லை என்று சொல்லி தங்கள் எதிர்ப்பை அந்தக் குழு வன்முறை வழியாக வெளிப்படுத்தியுள்ளது. இதைவிட முக்கியமாக, அவர்களுக்கு இன்னொரு உள்நோக்கமும் இருந்ததாம். தங்களது ஆதிக்கத்தை அப்பகுதியில் பிறர் அறிய அவர்கள் இத்தகைய அடாவடிச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, சம்பவத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களாக ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை(மே 20) தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கிகள் உள்பட பிற ரக துப்பாக்கிகளும் அறிதிறன் கைப்பேசி சாதனங்களும் அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மீது ஏற்கெனவெ பல்வேறு குற்ற வழக்கு பின்னணியும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.