பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மெட்ரோ மாநகரங்களில் முதலிடத்தில் கொல்கத்தா!
பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாள்களில் மெட்ரோ மாநகரங்களில் கடந்து வந்த பாதை!
இந்திய மெட்ரோ மாநகரங்களில் எரிவாயு விலை ஏற்றம் ஏறுமுகம் கண்டுள்ளது. கடந்த பத்து நாள்களில் மூன்றாவது முறையாக இன்றும்(மே 23) பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின், 4 ஆண்டுகள் கழித்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் கடந்த மே 15-ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்தது. மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தோ்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ. 3 உயர்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 19-ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பத்தே நாள்களில் ரூ. 5 வரை விலையேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இனி வரும் நாள்களில் மேலும் விலை உயர்த்தப்படலாம் என்றே சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
இதனிடையே, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவியதால் பீதியடைந்து மக்கள், பெட்ரோல்-டீசலை வாங்கி இருப்பு வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. மகாராஷ்டிரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி பரவியதால் மக்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்தனா். பெரிய கேன்களுடன் மக்கள் முண்டியடிக்கும் காட்சிகளும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.