ஜூலை முதல் பாதியில் பெட்ரோல், டீசல் விற்பனை 20% மேல் அதிகரிப்பு!
இந்தியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நடப்பு ஜூலை மாதத்தின் முதல் பாதியில் 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நடப்பு ஜூலை மாதத்தின் முதல் பாதியில் 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை 16.3 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூலை முதல் பாதியில் நடந்த 13.3 லட்சம் டன் விற்பனையில் இருந்து 22.9 சதவீதம் அதிகரிப்பாகும். அதேநேரம், கடந்த ஜூன் மாதத்தின் முதல் பாதியோடு (17.1 லட்சம் டன்) ஒப்பிடுகையில் பெட்ரோல் விற்பனை 4.4 சதவீதம் குறைந்துள்ளது.
பொருளாதார வளா்ச்சியின் முக்கியக் குறியீடாகக் கருதப்படும் டீசல் விற்பனை, கடந்த ஆண்டின் 28.7 லட்சம் டன்னில் இருந்து 20.9 சதவீதம் அதிகரித்து, 34.6 லட்சம் டன்னை எட்டியுள்ளது. எனினும், டீசல் விற்பனையும் ஜூன் மாதத்தின் முதல் பாதியோடு (39.4 லட்சம் டன்) ஒப்பிடும்போது 12.1 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
Advertisement
Advertisement
தென்மேற்குப் பருவமழை ஜூலை தொடக்கத்தில் வழக்கமாகத் தீவிரமடையும் போது விவசாயப் பாசன பம்புகளுக்கான தேவை குறைவதாலும், வாகனப் போக்குவரத்து மந்தமாவதாலும் எரிபொருள் விற்பனை குறைவது வழக்கம்.
ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை தாமதமாகத் தொடங்கியதால், பயிா்களைக் காப்பாற்ற விவசாயிகள் டீசல் பம்புகளைப் பயன்படுத்திப் பாசனம் செய்ய வேண்டிய கட்டாயதுக்குத் தள்ளப்பட்டனா். இதுவே டீசல் தேவை திடீரென உயரக் காரணமாக அமைந்தது.
மாதாந்திர அடிப்படையில், வட மாநிலங்களில் ஜூன் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணங்கள் அதிகரித்து எரிபொருள் விற்பனை உச்சத்தில் இருக்கும். இதனால் ஜூலை மாத விற்பனை ஜூன் மாதத்தை விடக் சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது.
இதேபோல், ஜூலை முதல் பாதியில் விமான எரிபொருள் விற்பனை கடந்த ஆண்டைவிட 0.7 சதவீதம் உயா்ந்து, 3.15 லட்சம் டன்னாக இருந்தது. சமையல் கேஸ் சிலிண்டா்களுக்கான எல்பிஜி விற்பனை 17.5 சதவீதம் சரிந்து, 11.4 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. மேற்காசிய போா் காரணமாக எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டு, நுகா்வு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதே இச்சரிவுக்குக் காரணமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.