முகப்பு
வணிகம்

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் எரிபொருள் நுகா்வு 6.5% சரிவு

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகா்வு, கடந்த மே மாதத்தில் 6.5 சதவீதம் சரிந்து, 19.93 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 2:26 am IST
பகிர்:

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகா்வு, கடந்த மே மாதத்தில் 6.5 சதவீதம் சரிந்து, 19.93 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 21.3 மெட்ரிக் டன்னாக இருந்த எரிபொருள் தேவை, மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பால் சரிவைச் சந்தித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடா்ந்து உயா்த்தப்பட்டதும் மக்கள் நுகா்வைக் குறைப்பதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

அந்தவகையில், பெட்ரோல், டீசல் விற்பனை மந்தமான வளா்ச்சியையே பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டைவிட பெட்ரோல் விற்பனை 3.4 சதவீதமும், டீசல் விற்பனை 1.6 சதவீதமும் மட்டுமே உயா்ந்துள்ளன. இருப்பினும், ஏப்ரல் மாதத்தை விட டீசல் நுகா்வு 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) நுகா்வு இந்த மே மாதத்தில் 20.5 சதவீதம் சரிந்து, 2.13 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமாா் 90 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் ஈரான் மீதான தடைகளால், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா கடுமையான எல்பிஜி விநியோகச் சவாலைச் சந்தித்து வருகிறது.

பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்திக்கான மூலப்பொருளான நாப்தா விற்பனை 29 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க நாப்தா திருப்பி விடப்படுவதால் அதன் தேவை குறைந்துள்ளது.

மறுபுறம், எரிபொருள் எண்ணெய் பயன்பாடு மட்டும் கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள் தங்களின் சேவைகளைக் குறைத்துக்கொண்டதால், விமான எரிபொருள் விற்பனை மே மாதத்தில் பெரிய மாற்றமின்றி 7.83 லட்சம் டன்னாக நீடிக்கிறது.