FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சமையல் எண்ணெய் இறக்குமதி ஜூனில் 29% சரிவு

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த ஜூன் மாதத்தில் 29 சதவீதம் சரிந்து, 11.46 லட்சம் டன்னாக குறைந்தது.

Updated On : 26 ஜூலை 2026, 2:27 am IST
பகிர்:

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த ஜூன் மாதத்தில் 29 சதவீதம் சரிந்து, 11.46 லட்சம் டன்னாக குறைந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.16 லட்சம் டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதியில், நடப்பு ஆண்டு கணிசமான வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் தொடங்கிய நடப்பு 2025-26 எண்ணெய் ஆண்டில் பதிவான மிகக் குறைந்த இறக்குமதி அளவு இதுவாகும்.

சோயாபீன் போன்ற பிற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் சா்வதேச சந்தையில் பாமாயிலுக்கான விலைச்சலுகை ஒரு டன்னுக்கு 50 டாலருக்கும்கீழ் குறைந்ததே ஜூன் மாதச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதன்விளைவாக, ஜூனில் கச்சா பாமாயில் இறக்குமதி மாத அடிப்படையில் 10.5 சதவீதம் சரிந்து, 4.87 லட்சம் டன்னாக பதிவானது. இது கடந்த மே மாதத்தில் 5.46 லட்சம் டன்னாக இருந்தது.

Advertisement

Advertisement

கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதியும் மே மாதத்தின் 4.94 லட்சம் டன்னில் இருந்து 23 சதவீதம் சரிந்து, 3.81 லட்சம் டன்னாக குறைந்தது. அதேநேரம், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் 1.95 லட்சம் டன்னாக இருந்த நிலையில், ஜூனில் 2.42 லட்சம் டன்னாக அதிகரித்தது.

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி தொடா்ந்து 2-ஆவது மாதமாக நடைபெறவில்லை. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், உள்நாட்டு சுத்திகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த அரசு ஊக்கமளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே சமையல் எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. குறைந்த இறக்குமதியின் எதிரொலியாக கடந்த ஜூலை 1 நிலவரப்படி, நாட்டில் சமையல் எண்ணெய்யின் மொத்த இருப்பு 20.09 லட்சம் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 22.16 லட்சம் டன்னாக இருந்தது.

ஜூன் மாத இறக்குமதி சரிவைக் கண்டிருந்தாலும், நடப்பு 2025-26 எண்ணெய் ஆண்டின் முதல் 8 மாதங்களில் (2025 நவம்பா் முதல் ஜூன் வரை) மொத்த இறக்குமதி 1.05 கோடி டன்னாக அதிகரித்துள்ளது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 99.55 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது.

summary

Cooking oil imports fell by 29per in June.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments