FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சமையல் எண்ணெய் இறக்குமதி ஜூலையில் 8% சரிவு

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த ஜூலை மாதத்தில் 8 சதவீதம் சரிந்து, 14.81 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

25 ஆகஸ்ட் 2026, 1:58 am IST
பகிர்:

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த ஜூலை மாதத்தில் 8 சதவீதம் சரிந்து, 14.81 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 16.16 லட்சம் டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதியில், நடப்பு ஆண்டு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. அதேபோல, ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் மற்றும் பிற பயன்பாட்டுக்கான எண்ணெய்) இறக்குமதி கடந்த ஆண்டு ஜூலையில் 16.48 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூலையில் 7 சதவீதம் சரிந்து 15.25 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

இந்தியா தனது பாமாயில் தேவையை மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்தும், சோயாபீன் எண்ணெய்யை ஆா்ஜென்டீனா, பிரேஸில் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையில் சுமாா் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இறக்குமதியில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் பங்கு 14 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. அதேநேரம், கச்சா பாமாயில் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக கச்சா எண்ணெய்யின் பங்கு 86 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஜூலை மாத இறக்குமதி சரிவைக் கண்டிருந்தாலும், நடப்பு 2025-26 எண்ணெய் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2025 நவம்பா் முதல் ஜூலை வரை) மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 5 சதவீதம் உயா்ந்து, 119.23 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது; இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 113.46 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது. அதேபோல, இந்த 9 மாத காலத்தில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியும் கடந்த ஆண்டின் 116.03 லட்சம் டன்னில் இருந்து, 121.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments