நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்!
அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தல்
புது தில்லி : நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவ படிப்பு நீட் நுழைவுத் தோ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் தெரிவித்திருப்பதாவது : “நீட் மறு தேர்வு நாளில் அத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இலவச பேருந்து சேவை அளிக்குமாறு நாட்டின் அனைத்து முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பஞ்சாபில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்று எங்களது அரசு (ஆம் ஆத்மி அரசு) கடந்த ஓரிரு நாள்களுக்கு முன் அறிவித்தது. இப்போது, ஹரியாணா மற்றும் பிகார் முதல்வர்களும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்போது, அனைத்து முதல்வர்களும் அதே அறிவிப்பை வெளியிட கேட்டுக்கொள்கிறேன். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மாணவர்களுக்கு வாழ்த்துகள்!” என்றார்.