அதிகரித்துவரும் வெப்பநிலை: மக்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை!
பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் அறிவுரை..
கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதீத வெப்பத்தால் பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெய்யிலிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கோடை வெய்யிலால் அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுட்டெரிக்கும் வெய்யிலில் குழந்தைகள், முதியோர்கள், வெளியில் செல்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். வெப்ப சோர்வு போன்ற எந்தவொரு அசௌகரியத்தையும் மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். வெப்ப பாதிப்புகள் கவனிக்காவிட்டால் வெப்ப பக்கவாதத்திற்கு ஆளாகக்கூடும்.
அனைவரும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், வெளியே செல்லும்போதெல்லாம் தண்ணீர் எடுத்துச் செல்லவும், மற்றவர்களுக்கும் தண்ணீர் கொடுத்து உதவலாம். தலைச்சுற்றல், குமட்டல், அதீத சோர்வு போன்ற வெப்ப சோர்வின் அறிகுறிகளாகும்.
வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறும், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் தண்ணீர், ஓஆர்எஸ் கரைசல் போன்றவை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் மோடி மக்களை வலியுறுத்தினார்.
கடுமையான வெய்யிலுக்கு மத்தியில் பறவைகளையும் விலங்குகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. வீடு, பால்கனி, மொட்டை மாடிகள், கடைகள், அலுவலகங்களுக்கு வெளியே சிறிய கோப்பையில் தண்ணீர் நிரப்பி வைக்கலாம். இது தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கு உதவும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளைக் கடும் வெப்பம் சூழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பண்டாவில் பதிவான வெப்பநிலை, 47.4 டிகிரி செல்சியஸாகப் பட்டியலில் முதலிடம் வகிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.