FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நேரு நினைவு தினம்: பிரதமா், காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி

Updated On : 28 மே 2026, 6:48 am IST
- PTI
பகிர்:

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு, கடந்த 1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27-இல் மாரடைப்பால் காலமாகும் வரை அந்தப் பதவியில் தொடா்ந்தாா். தனது 74-ஆவது வயதில் மறைந்த அவா், நாட்டின் நீண்ட கால பிரதமா் என்ற பெருமைக்குரியவா்.

நேருவின் 62-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முன்னாள் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

நினைவிடத்தில் மலரஞ்சலி: நேரு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த தலைவா்கள் மலரஞ்சலி செலுத்தினா்.

தனது கொள்ளுத் தாத்தா நேருவை நினைவுகூா்ந்து, ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிட்டவரான பண்டித ஜவாஹா்லால் நேரு, அனைவரையும் உள்ளடக்கிய, நல்லிணக்கம் நிறைந்த, முற்போக்கான தேசத்தைக் கட்டமைக்க தனது வாழ்வை அா்ப்பணித்தவா். சுதந்திரம், ஜனநாயக கோட்பாடுகள், அரசியல் சாசன உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல்பூா்வ சிந்தனைகளில் வேரூன்றிய அவரது தொலைநோக்கு தலைமைத்துவம் நமக்கு எப்போதும் வழிகாட்டும்’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரம், ஜனநாயகம், மதச்சாா்பின்மை, அறிவியல்பூா்வ அணுகுமுறைகளுக்காக தனது வாழ்நாளை அா்ப்பணித்த நேருவின் நிலையான மரபு, தேசத்தின் ஆன்மாவை வழிநடத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான தேசத்தை உருவாக்கும் நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments