சித்தராமையா காலில் விழுந்து ஆசிப் பெற்ற டி.கே. சிவக்குமார்!
சித்தராமையா காலில் விழுந்து டி.கே. சிவக்குமார் ஆசிப் பெற்றது பற்றி...
கர்நாடக முதல்வர் சித்தராமையா காலில் விழுந்து துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வியாழக்கிழமை ஆசிப் பெற்றார்.
கடந்த 2023 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வா் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமாா் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சிமுறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வா் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை முன்வைத்ததை ஏற்று, சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றார்.
இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
Advertisement
Advertisement
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று, சித்தராமையா இன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார்.
முன்னதாக, அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தனது இல்லத்தில் காலை விருந்தை சித்தராமையா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தில் கலந்துகொண்ட டி.கே. சிவக்குமார், சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசிப் பெற்றார். அவரை கட்டியணைத்து சித்தராமையா வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து இன்று பிற்பகலில் கர்நாடக ஆளுநரைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை சித்தராமையா கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.