உ.பி.யில் பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் பலி! உதவிப் பொறியாளர் இடைநீக்கம்
உத்தரப் பிரதேசத்தில் பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் உதவிப் பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் உதவிப் பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், பெட்வா ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி, பலத்த சூறாவளிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். மூன்று தொழிலாளர்கள் ஒரு தூணின் கீழ் சிக்கி பின்னர் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஹமீர்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள், பாலத்தின் மேல் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அது திடீரென இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
ஹமீர்பூர் மாவட்ட ஆட்சியர் அபிஷேக் கோயல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சேகர் பதக் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மேற்கொண்டு வந்த மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர். இந்தப் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நடைபெற்று வருவதாகவும் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் பணியின்போது அலட்சியம் காட்டியதாக உதவிப் பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.