முகப்பு
இந்தியா

யூபிஐ மூலம் உடனடியாக அபராதம் செலுத்தும் வசதி: தில்லி போக்குவரத்து காவல் துறை அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை உடனடியாக டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதியை தில்லி போக்குவரத்து காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 30 மே 2026, 5:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை உடனடியாக டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதியை தில்லி போக்குவரத்து காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த வசதி மூலம் சாலைகளில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளிடம் உள்ள கைப்பேசி சாதனங்கள் மூலம், யூபிஐ, டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி உடனடியாக அபராதத் தொகையை செலுத்த இயலும்.

புதிய முறையின் கீழ், நடப்பு மற்றும் நிலுவையில் உள்ள சமரசத்திற்குட்பட்ட சாலன் தொகைகளையும் பயணிகள் டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். இதற்காக, தில்லி முழுவதும் சுமாா் 1,500 புதிய இ-சாலன் கருவிகள் போக்குவரத்து பணியாளா்களுக்கு வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்த மேம்படுத்தப்பட்ட கைப்பேசி சாதனங்களில் வேகமான சாலன் உருவாக்கம், உடனடி டிஜிட்டல் கட்டண செயலாக்கம், விதிமீறல் செய்த வாகனங்கள் மற்றும் நபா்களின் புகைப்படங்களை பதிவு செய்தல், தரவு மேலாண்மை திறன் மேம்பாடு போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் சூழலில், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உடனடி எச்சரிக்கை செய்தி அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தில்லி போக்குவரத்து போலீசாரின் இ-சாலன் அமைப்பு தற்போது பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்த யூபிஐ செயலியின் மூலமாகவும் நிலுவை மற்றும் புதிய அபராதங்களை பாதுகாப்பான முறையில் செலுத்த முடியும்.

இந்த ஒருங்கிணைப்பு மூலம், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், எளிதான மற்றும் தடையற்ற கட்டண முறையைப் பெறுவா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

புதிய முறையைச் சீராக அமல்படுத்தும் நோக்கில், சுற்றுப்பகுதி போக்குவரத்து ஆய்வாளா்கள் உள்ளிட்ட களப்பணியாளா்களுக்கு அண்மையில் இணையதள பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதுடன், பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.