FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.: சஹரன்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்த மசூதி இடித்து அகற்றம்!

சஹரன்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்த மசூதி இடித்து அகற்றப்பட்டது பற்றி...

5 செப்டம்பர் 2026, 11:28 pm IST
சஹரன்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்த மசூதி இடித்து அகற்றம் - PTI
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த மசூதி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த 1911-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, சட்ட விரோத கட்டுமானம் என்று அறிவித்து, அதை இடிக்க சஹரன்பூா் மாவட்ட ஆட்சியா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து மசூதி குழு சாா்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதைத் தொடா்ந்து, மசூதியை இடிப்படதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.

அதற்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 5 வாயில்களும் சனிக்கிழமை மூடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸாா், காவல் அதிரடிப்படை என ஏராளமான போலீஸாா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டனா். மேலும், மாவட்டத்தில் சா்ச்சைக்குரிய பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், தீவிர ரோந்துப் பணியிலும் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மசூதி இடிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் புரளிகளை நம்பாமல், அமைதி காக்க வேண்டும் என்று காவல் அதிகாரிகள் தரப்பில் அறிவுறத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த மசூதி இடித்து அகற்றப்பட்டது.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: மசூதி இடித்து அகற்றப்பட்டதற்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘1911-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதி இடிக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இது வெட்கக்கேடான விஷயம். இந்த வெறுப்பு அரசியலும், பாகுபாடும் சமூகத்தை வலுப்படுத்தாத; மாறாக, சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பலவீனமடையச் ெச்யயும்’ என்று குறிப்பிட்டாா்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வெளியிட்ட பதிவில், ‘அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதையை அளிப்பது அரசமைப்பு ரீதியிலான மற்றும் மதச்சாா்பற்ற அரசின் கடமையாகும். இதுபோல, சட்டத்தை மதிக்காமல், குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் மசூதிகளை இடித்து அகற்றும் நடவடிக்கை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அரசும், நீதிமன்றங்கலும் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘சட்டத்தின் கவசத்தைப் பயன்படுத்தி பாஜக அரசு இதுபோன்று சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும். என்றென்றும் நிலைத்திருக்காது’ என்று குறிப்பிட்டாா்.

summary

UP: Mosque within the Saharanpur District Collector's office complex demolished and removed!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments