காரைக்கால் அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மதுபோதையில் பைக் ஓட்டிவந்ததாக மாணவர்களை போலீஸார் அடித்ததால், ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல் நிலைய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உறவினர்கள்
மதுபோதையில் பைக் ஓட்டிவந்ததாக மாணவர்களை போலீஸார் அடித்ததால், ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல் நிலைய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் புதுச்சேரி காவல்துறை தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதி அண்டூர் கிராமம் நடராஜன் மகன் பிரவீன் (17). இவர் காரைக்காலில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் டி.சி.இ. முதலாமாண்டு படித்துவந்தார். இவருடைய நண்பர்கள் அருண்குமார் (17), பிரபு (18), சீனிவாசன் (20) ஆகிய நால்வரும் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரியிலிருந்து ஒரே பைக்கில் காரைக்கால் நோக்கி வந்துகொண்டிருந்தனர். கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். இவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறி, மாணவர்களை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நால்வரையும் கண்டித்து அனுப்பிவிட்டனர் போலீஸார்.
இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற மாணவர் பிரவீன், வீட்டின் அருகே உள் ஆல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் தாக்கியதில் மன உளைச்சலில் இருந்ததாக மாணவர்கள், உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து காவலநிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்படுகிறது. இப்பிரச்னை குறித்து உயிரிழந்த மாணவரின் உறவினர் கே.பாலமுருகன் என்பவர் புதுச்சேரி ஐ.ஜி. மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், உறவினரான பிரவீன் எனக்கு சகோதரர் முறையாவார். இவரது தந்தை நடராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டார். தாய் கூலி வேலை செய்துவருகிறார். மது அருந்தும் பழக்கம் பிரவீனுக்கு இல்லை. 4 பேர் வாகனத்தில் சென்றதாகக் கூறி போலீஸார், இவரை கடுமையாக அடித்து, அரை நிர்வாணத்துடன் காவல்நிலைத்தில் உட்காரவைத்தனர். தகவலின்பேரில் காவல்நிலையத்துக்கு நான் சென்றபோது, அரை நிர்வாணத்துடன், முகம் வீங்கிய நிலையில் இருந்தது கொடுமையாக இருந்தது. ஒரு கல்லூரி மாணவனை போலீஸார் நடத்திய விதம் வேதனைக்குரியது.
Advertisement
Advertisement
கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர் வீட்டுக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டும் விதமாக போலீஸ் அதிகாரியின் செயல் இருந்துள்ளது. காவல்நிலைய உதவி ஆய்வாளர் இனியன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.