காவிரியில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து இன்று புதன்கிழமை 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல்
தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து இன்று புதன்கிழமை 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்குவதற்கு 9-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி நீரானது, தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் உபரிநீர் வரத்து கடந்து மூன்று நாள்களாக நொடிக்கு 8,500 கனஅடியாக இருந்து வந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 9,500 கன அடியாகவும், மாலை நிலவரப்படி சற்று நீர்வரத்து அதிகரித்து, நொடிக்கு 9,800 கன அடியாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
Advertisement
Advertisement
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், பரிசல் இயக்குவதற்கு தொடர்ந்து 9-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.