முகப்பு
சிறப்புச் செய்திகள்

டாடா நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! விற்பனையில் 2 லட்சம் ரகசிய கோப்புகள்! என்ன நடந்தது?

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 3:33 pm IST
டாடா எலக்ட்ரானிக்ஸ் - x
பகிர்:

ஆப்பிள், டெஸ்லா போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய விநியோகஸ்தராக விளங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் தொடர்பான ரகசிய கோப்புகள் உள்பட மொத்தம் 630 ஜிபி தரவுகள் கொண்ட 2,00,000 கோப்புகளை ஹேக் செய்த குழுவினர் டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளனர்.

சீனாவுக்கு மாற்றாக உலகளாவிய உற்பத்திச் சங்கிலியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய சைபர் தாக்குதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

summary

செய்தியின் உள்ளடக்கம்

  • டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதலில் 2,00,000 கோப்புகளை திருடிய ரான்சம்வேர் குழு

  • சைபர் தாக்குதலால் உற்பத்தி பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று டாடா நிறுவனம் விளக்கம்

  • டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்த ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்களின் ரகசிய கோப்புகளும் கசிந்தன

  • திருடப்பட்ட கோப்புகளை டார்க் வெப்பில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள ரான்சம்வேர் குழு

எப்போது, எப்படி நடந்தது?

சில வாரங்களுக்கு முன்னதாக, தங்களின் சில கணினிகளில் ஒரு சைபர் தாக்குதல் தொடர்பான நிகழ்வை அடையாளம் கண்டதாகவும், அதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தியதாகவும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலால் தங்களின் செயல்பாடுகளும், உற்பத்திப் பணிகளும் பாதிக்கப்படவில்லை என்றும், எவ்வித இடையூறுமின்றி தொடர்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ரான்சம்வேர் குழுவான ‘வேர்ல்ட் லீக்ஸ்’ பொறுப்பேற்றுள்ளது. டார்க் வெப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கோப்புகள் வெளியானதை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டாடா எலக்ட்ரானிஸ் நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட 630 ஜிபி மதிப்புள்ள 2 லட்சம் கோப்புகள் டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்பிள், டெஸ்லா ஆவணங்கள் கசிவு?

டார்க் வெப்பில் கசிந்த தரவுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள், ஆப்பிள், டெஸ்லா தொடர்பான ஆவணங்கள் இடம்பெற்றிருப்பதை கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் ரகசிய வர்த்தகம் தொடர்பான ஆவணங்கள் கசிந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆய்வாளர்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஆவணங்கள்

  • உற்பத்தி ஆவணங்கள்

  • வடிவமைப்பு விவரக் குறிப்புகள்

  • அசெம்பிள் வழிமுறைகள்

  • பொருள் விவரக் குறிப்புகள்

  • தர ஆய்வுகள் தொடர்பான கோப்புகள்

  • மின்னஞ்சல்கள்

  • ஊழியர்களின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் அடையாள அட்டைகள்

மேலும், ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, டெஸ்லாவின் சார்ஜிங் போர்ட் கன்ட்ரோலருடன் தொடர்புடைய ஆவணங்கள், ’ப்ராஜெக்ட் ஹைலேண்ட்’ வாகனத் திட்டத்துடன் தொடர்புடைய வரைபடங்கள் போன்றவை கசிந்ததாக தெரிவித்துள்ளது.

விடைதெரியாத கேள்விகள்

சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எப்படி டாடா நெட்வொர்க் அமைப்பை அணுகினார்கள், எவ்வளவு காலம் நெட்வொர்க்கிற்குள் இருந்தார்கள் அல்லது டார்க் வெப்பில் இருக்கும் கோப்புகள் உண்மையானவையா என்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லை.

தரவுகளை மதிப்பாய்வு செய்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஜூன் 10 முதல் டார்க் வெப்பில் கோப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தனது சைபர் பாதுகாப்புக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக டெஸ்லா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

இதனிடையே, திருடப்பட்ட கோப்புகளை டார்க் வெப்பில் வெளியிடாமல் இருக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் சைபர் தாக்குதல் குழுவினர் பேரம் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிவைக்கப்படும் விநியோகஸ்தர்கள்

சைபர் தாக்குதல் குழுவினர், தொழில்நுட்ப நிறுவனங்களைவிட உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களையே அதிகளவில் குறிவைத்து வருகின்றனர்.

உற்பத்தியாளர்களிடம் பெரும்பாலும் அதிக மதிப்புமிக்க அறிவுசார் சொத்துக்கள், பொறியியல் வடிவமைப்புகள் மற்றும் பல உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான உற்பத்தித் தரவுகள் இருப்பதாக் அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

கடந்த மாதம், ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு விநியோகஸ்தரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, வாடிக்கையாளர்களின் ரகசிய தரவுகளை கைப்பற்றியதாக சைபர் தாக்குதல் குழுவினர் தெரிவித்தனர்.

ஒரு விநியோகஸ்தர்களும் பெரும்பாலும் பல பன்னாட்டு நிறுவனங்களின் பாகங்களை உற்பத்தி செய்து வருவதால், அவர்கள் நேரடியாக தாக்கப்படுகிறார்கள் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு பின்னடைவு

சர்வதேச மின்னணு உற்பத்தி துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், முக்கியமான கட்டத்தில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவுக்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய கூட்டாளியாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உருவெடுத்துள்ளது. ஐபோன்களை அசெம்பிள் செய்வது, உதிரிபாகங்கள் உற்பத்தி உள்ளிட்டவை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவின் ஐபோன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை டாடா நிறுவனம் செய்து வருகின்றது. மீதமுள்ள உற்பத்தி ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் செய்யப்படுகிறது.

டெஸ்லா நிறுவனத்துக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மின்னணு உதிரி பாகங்களை தயாரித்து கொடுத்து வருகின்றது.

இதனால்தான், இந்த சம்பவம் ஒரு நிறுவனத்தின் இணையப் பாதுகாப்புப் பிரச்னை என்பதைத் தாண்டி பார்க்கப்படுகிறது. உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பதற்கான முயற்சியை இந்த தாக்குதல் கேள்விக்குறியாக்கியுள்ளது.

summary

Explainer - Cyberattack on Tata electronics - 2 lakh confidential files on sale - What happened

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments