முகப்பு
தற்போதைய செய்திகள்

காளி வேஷமிட்ட நபரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த இளைஞர்கள்!

இறந்த காளு ஒரு அனாதையாக விடப்பட்டவர் என்பதும் அவர் கலாகாஜி மந்திரின் சேவை அமைப்பான தரம்சாலா ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

Updated On : 29 மே, 2018 at 11:03 AM
பகிர்:

டெல்லியைச் சேர்ந்த காளு அலைஸ் களுவா எனும் இளைஞர் தீவிரமான காளி பக்தர். சில நேரங்களில் காளி வேஷமிட்டுக் கொண்டு, தன்னைத் தானே காளியாகக் கற்பனை செய்துகொண்டு சுற்றும் அளவுக்கு அவருக்கு காளி மீது அபார பக்தி. அப்படித்தான் கடந்த மே 22, 23 ஆம் தேதிகளில் NSIC காட்டுப் பகுதியில் கருப்பு நிற சல்வார், சிவப்பு நிற துப்பட்டா, காலில் கொலுசு அணிந்து காளி போல உலவிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒதுக்குப்புறமான அந்தப் காட்டுப்பகுதியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த நவீன் (20) அமன் குமார் சிங் (20), மோஹித் குமார் (25), சஜல் குமார் (19) உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் காளி வேஷமிட்டு உலவிக் கொண்டிருந்த காளு படவே அவர்கள் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்யும் நோக்கில் அணுகி காளுவை அடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்தத் தகராறு முற்றி ஒரு கட்டத்தில் காளுவை அவர்கள் மிக மூர்க்கமாகக் குத்தி, அடித்து உதைத்ததில் காளு இறந்து விட்டார் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இறந்த காளு ஒரு அனாதையாக விடப்பட்டவர் என்பதும் அவர் கலாகாஜி மந்திரின் சேவை அமைப்பான தரம்சாலா ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

காளுவுக்கு ஒரு சகோதரர் உண்டு என்பதால், தற்போது போஸ்ட் மார்ட்டம் முடிந்த நிலையில் அவரது உடல் இறுதிச் சடங்குகள் செய்வதற்காக சகோதரரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

Advertisement

காளுவைத் தாக்கிக் கொன்ற நான்கு இளைஞர்களும் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காளுவைத் தாக்கியதன் காரணம் குறித்து அவர்களைக் காவல்துறையினர் விசாரிக்கையில், காளு, வினோதமாக உடையணிந்து கொண்டு திருநங்கைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பது குறித்து அவர்களுக்கு முன்பே வெறுப்பிருந்திருக்கிறது. அதோடு சம்பவ தினத்தன்று, குடிபோதையில் காளுவின் காளியவதார தோற்றத்தைக் கண்டு இவர்கள் நகைத்துக் கேலி செய்ய முயன்றிருக்கிறார்கள். அப்போது, காளு, தனது தோற்றத்தைப் பற்றி கேலியாக நகைக்க வேண்டாம் என எச்சரித்திருக்கிறார். இதனால் வெறி ஏறிய நான்கு இளைஞர்களும் காளுவைத் தாக்கியதோடு காட்டின் உட்பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஸ்விஸ் கத்தியை வைத்து மாற்றி, மாற்றி குத்தியிருக்கிறார்கள். இதனால் காளுவின் உயிர் சம்பவ இடத்திலேயே பறிபோயிருக்கிறது.

காளு கொலைக்குக் காரணமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தற்போது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.