தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரண்!
மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்ததைப் பற்றி..
மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் அம்மாநில காவல்துறையிடம் இன்று சரணடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம்சு துர்கு போயம் (எ) நர்சிங் (வயது-55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷமு குஞ்சம் (வயது-25) ஆகிய இருவரையும் பிடிக்க ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச.20) கட்சிரோலி மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தற்போது சரணடைந்திருக்கும் போயம் கடந்த 1992 ஆம் ஆண்டு டிபாகாட் தாலம் எனும் மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாகவும், அவர் கடந்த 30 ஆண்டுகளாக கொலை, கொள்ளை உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பல்வேறு மாவோயிஸ்ட் அமைப்புகளில் அவர் பயிற்சியாளராக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்நிலையில் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதியான அவரைப் பிடிக்க மாநில அரசின் சார்பில் ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: ஒடிசாவில் 18.5 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
அவருடன் சரணடைந்திருக்கும் குஞ்சம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்ததாகவும் அவரைப் பிடிக்க மாநில அரசின் சார்பில் ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரணடையும் பயங்கரவாதிகளுக்காக மறுவாழ்வு அமைக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகளின் சார்பில் சுமார் ரூ.4,50,000 அளவிலான நலத்திட்டங்கள் இருவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நலத்திட்டத்தின் அடிப்படையில் இந்தாண்டில் (2024) மட்டும் தேடப்பட்ட மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் 20 பேர் சரணடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.