முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆதரவாளர்கள் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜூலை 2024, 10:54 am IST
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பகிர்:

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் (54), பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பாா்வையிட வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் அருகே சென்றதும், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் நடந்து சென்றாா்.

அப்போது 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா். இதில் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Advertisement

Advertisement

அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்து கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் உடல்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை மருத்துவமனைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

தனிப்படையினா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், கொலையாளிகள் உணவு விநியோகம் செய்யும் ஒரு நிறுவன சீருடையில் வந்தது தெரியவந்தது.

இதனிடையே, சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் சரணடைந்தனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் சடலம் உடல்கூறு ஆய்வு சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கின் காரணமாக படுகொலை செய்யப்படடுள்ளார்.

சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான கொலையாளியை கைது செய்ய வேண்டும்.

மேலும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியவாறு மருத்துவமனை முன்புள்ள நான்கு முனை சாலையில் அமர்ந்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆதரவாளர்களுடன் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 7) பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி சென்னை வருவதாகவும், அனைவரும் அமைதி காக்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.