நெல்லை, கோவை மேயர் தேர்தல் அறிவிப்பு!
நெல்லை, கோவை மேயர் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுரை.
நெல்லை, கோவை மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுகத் தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவை, நெல்லை மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் தங்களது பதவியை ஜூலை 3 ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தனர்.
தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கோவை மேயர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக கல்பனா தெரிவித்திருந்தார். குடும்பச் சூழல் காரணமாக நெல்லை மேயர் பதவியை ராஜிநாமா செய்வதாக பி.எம். சரவணன் கடிதம் அளித்திருந்தார்.