திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!
அமெரிக்காவில் காவலர்களின் வன்முறையால் பலியான கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவரை காவல்துறையினர், 2020-ம் ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா். அவர் காரில் ஏற மறுத்த போது, ஃபிளாய்டை கீழே தள்ளி அவரின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ’கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) என்ற வாசகம் உலகெங்கும் பரவியது.
நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் காவலரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
Advertisement
இந்த விவகாரத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ‘டாடி சேஞ்ஜ்ட் தி வேர்ல்டு’ (Daddy changed The World) என்ற பெயரில் தயாராகவுள்ள இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள ஃப்ளாய்டின் மகள் மற்றும் மனைவி, படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றவுள்ளனர்.
இயக்குநர் யாரென்று முடிவு செய்யப்படாத இந்தத் திரைப்படத்திற்கு, கிரிகோரி.ஆர்.ஆண்டர்சன் (Gregory R. Anderson) திரைக்கதை எழுதுகிறார்.
ராடார் பிக்சர்ஸ், 8 குயின்ஸ் மீடியா, நைட் ஃபாக்ஸ் எனும் 3 நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தைத் தயாரிக்கின்றன.
இந்த திரைப்படத்தில் ஃப்ளாய்டை மிகவும் சரியான நபராகக் காட்டாமல், மனிதர்களுக்கான வழக்கமான குறைகளைக் கொண்ட ஒரு தந்தை, எவ்வாறு தன் மரணத்தால் உலகையே மாற்றினார் என்றும், ஒரு கடினமான வாழ்க்கையைக் கொண்ட ஒரு மனிதனின் இனம், எவ்வாறு வரலாற்றின் தீயில் தள்ளப்பட்டது என்றும் குறிப்பிடவுள்ளதாக தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”ஃப்ளாய்ட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றின் மிகவும் மோசமான, வெட்கத்திற்குரிய நிகழ்வாகும். இதுபோன்று இனிமேலும் நடக்காமலிருக்க நாம் சமூகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. ஃப்ளாய்டின் மகளைப்போல எந்த குழந்தையும் இனி தந்தையை இழக்கக்கூடாது. போராட்டத்தை எடுத்து நடத்தி உறுதுணையாக இருந்தவர்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். ஃப்ளாய்டின் பெருமை இந்தத் திரைப்படத்தின் மூலம் என்றும் நிலைக்கும்” என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.