ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் குகல்தாரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இதையும் படிக்க |போருக்கு தயாராகும் இஸ்ரேல்-ஈரான்: என்ன நடக்கும்?
Advertisement
அவா்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவா்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக சனிக்கிழமை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தின் சத்ரூ கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.