முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!

ரூ. 100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 2 செப்டம்பர் 2024, 5:16 pm IST
எம். ஆர். விஜயபாஸ்கர் (கோப்புப்படம்) - DIN
பகிர்:

ரூ. 100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா் ஆகியோா் முன் பிணை கோரி, கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், வாங்கல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் கரூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் எம். ஆா். விஜயபாஸ்கா், அவரது சகோதரா் எம்.ஆா். சேகா், பிரவீண் உள்பட 13 போ், தன்னை மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் சொத்துகளை அபகரித்ததாக அதில் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் மனுவானது கரூா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், தனது தந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரது சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக் கோரி, கரூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் முன்பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே 35 நாள்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சா் உள்ளிட்டோரை பிடிக்க கரூா் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் மற்றும் அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்ட சிபிசிஐடி போலீஸாரும் கரூரில் முகாமிட்டு, ஆந்திரம், கேரள போன்ற மாநிலங்களில் தேடி வந்தனா். கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மற்றும் அவரின் ஆதரவாளா் பிரவீன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

தொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், பிரவீன் மற்றும் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளா் பிருத்விராஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தலைமறைவாகி இருந்த நிலையில் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.