சிகிச்சைக்காக சீனா செல்லவிருந்த இராக் சிறுமி! விமானத்திலேயே மரணம்!
விமானத்தில் பலியானார் இராக் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி.
இராக் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி, சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற விமானம் மூலம் சீனா புறப்பட்ட நிலையில், நடுவானில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு விமானத்திலேயே உயிரிழந்தார்.
இராக்கிலிருந்து சீனா செல்ல வேண்டிய இராக் ஏர்வேஸ் விமானம், கொல்கத்தாவிற்கு திரும்பிவிடப்பட்டு, அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு இல்லாததைக் கண்டறிந்தனர். பின்னர், 16 வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
இறந்த டெகன் அகமது, அவரது பெற்றோருடன் சிகிச்சைக்காக குவாங்சோங் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களுக்குள் முன்பு, அவசரகால மருத்துவ சிகிச்சைக்காக தரையிறக்குவதற்கு, விமான போக்குவரத்து நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு, விமானி அனுமதிக் கோரினார்.
விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 16 வயதான அப்பெண்ணின் உடல் ஆர்ஜிகர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
உயிரிழந்த டெகன் அகமது உடல், தில்லி வழியாக பாக்தாத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
”பலியான அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆங்கிலம் தெரியாததால், எங்கள் அதிகாரிகளுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. எங்களுக்கு ஈராக் தூதரக அதிகாரிகளும், கொல்கத்தாவில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும் உதவி செய்தனர். 16 வயதான அப்பெண் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக சீனாவிற்கு சென்றுகொண்டிருந்தார்.” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.