முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதைப் பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2025 at 5:10 PM
பிரதமர் மோடியின் வருகையால் அந்நாட்டு தெரு நாய்களை அரசு பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். - ஏபி
பகிர்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்.6 அன்று இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனால், அந்நாட்டின் கொழும்பு மற்றும் புத்த மதத்தின் புனித நகரமான அனுராதப்புரத்திலுள்ள தெரு நாய்களைப் பிடிக்க அதிகாரிகளுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச். 28 முதல் அதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அந்நகரங்களிலுள்ள நாய்களை வாகனங்கள் மூலம் பிடித்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விலங்குகள் நல ஆர்வலர்களும் அந்நாட்டு மக்களும் கைகளில் பதாகைகளுடன் பேரணியாகச் சென்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவின் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இலங்கையிலுள்ள தெரு நாய்களை அப்பகுதிவாசிகள் மிகுந்த அன்புடன் வளர்த்து வருவதாகவும் அங்குள்ள பூங்காக்களிலுள்ள நாய்கள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடியின் வருகையினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் ஏப்ரல் 6 அன்று இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்புவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அதைத் தொடர்ந்து, கொலும்புவிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதப்புரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அவர், அங்குள்ள 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் மோட்சம் அடைந்த மரம் எனக் கருதப்படும் அத்தி மரத்திற்கு மரியாதைச் செலுத்தவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.