ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
ஈரானில் பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...
ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்தில் வாகன பழுப்பார்க்கும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஏப்.13 அன்று நள்ளிரவு அவர்களது கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் உரிமையாளர் தில்ஷாத், அவரது மகனான நயீம், ஜாஃபர், தானிஷ் மற்றும் நசீர் உள்ளிட்ட 8 தொழிலாளர்களின் கைகள் மற்றும் கால்களைக் கயிற்றால் கட்டிபோட்டு அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த ஈரான் தூதரகம், தீவிரவாதம் நீண்ட நாளாக நிலைபெற்றுள்ள ஒரு நோய், அது என்றுமே நாட்டுக்கு அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஸஹேதான் நகரத்திலிருந்து கொண்டு செல்லப்படும் முன்னர் பலியான பாகிஸ்தானியர்களின் உடல்களுக்கு ஸ்ஹேதான் மாகாண மேயர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மரியாதைச் செலுத்தினர்.
பின்னர், பாகிஸ்தானின் பஹாவால்பூர் விமான நிலையத்திற்கு நேற்று (ஏப்.17) வந்தடைந்த அவர்களது உடல்கள் அங்கிருந்து சாலை வழியாக அவர்களது சொந்த ஊரான அஹ்மதுபூர் ஷர்கியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் யாரென இதுவரை தெரியவராத நிலையில் ஈரானில் பதுங்கியுள்ள பலூசிஸ்தான் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க:கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தைகூட பிறக்காத நாடு!