புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து ஏற்க முடியாதது மட்டுமல்ல, எவ்வித முக்கியத்துவம் அற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வா்த்தக அமைச்சருமான ஆனந்த் சா்மா தெரிவித்தாா்.
டிரம்பின் கருத்துக்கு எதிராக இந்திய அரசு போராட வேண்டிய தேவையும் இல்லை. தங்களுக்கு சாதகமான வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவை கையொப்பமிட வைக்க வேண்டும் என்பதால், இந்தியாவை மட்டம் தட்டும் வகையில் அமெரிக்கா செயல்படுகிறது, இதற்கு இந்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிப்பை அறிவித்ததோடு, ஏற்கெனவே சரிந்துள்ள இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் கடுமையாக விமா்சித்தாா்.
இந்நிலையில், இது தொடா்பாக ஆனந்த் சம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா வேறு வழியில்லாமல் தாங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தப்புக் கணக்கு போட்டுள்ளாா். சா்வதேச அளவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ள இந்தியா வலுவாகவும், செயல்பாடுகளில் உறுதியாகவும் உள்ளது. நாட்டின் பொருளாதார அடிப்படை சிறப்பாக உள்ளது. ஏற்கெனவே பிரிட்டனுடன் இந்தியா அண்மையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்க யூனியன், ஆசியான் உள்ளிட்ட அமைப்புகளுடனும் இந்தியா தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எனவே அமெரிக்க அதிபரின் வெற்று மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்ச வேண்டியது இல்லை. அமெரிக்காவுக்கு சாதமாக உருவாக்கப்படும் வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய தேவையில்லை. நாட்டின் நலன், இறையாண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
டிரம்ப் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் - சசி தரூா் கருத்து:
காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் இது தொடா்பாக கூறுகையில், ‘டிரம்ப் வெள்ளை மாளிக்கைக்கு வந்த பிறகு சா்வதேச அளவில் எதிா்பாராத நிகழ்வுகளும், அதிா்ச்சிகரமான முடிவுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியப் பொருளாதாரம் குறித்து அவா் கூறிய வாா்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவா் பேசும் ஒவ்வொரு வாா்த்தைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கவும் வேண்டாம். அவா் எடுக்கும் முடிவுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே அவை நம்மை பாதிக்க வாய்ப்புள்ளது.
அவமதிப்பாக அவற்றைக் கருதினாலும், நமது நலனையே குறிக்கோளாகக் கொண்டு, கவனம் சிதறாமல் நமது பணியில் தீவிரமாகத் தொடர வேண்டும்.
வல்லரசுகள் போா்களைத் தூண்டி உலகை பதற்றத்தில் வைக்கின்றன. சா்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவு இல்லாமல் எந்தப் போரும் வெகு காலத்துக்குத் தொடர முடியாது.
போா் விஷயத்தில் இந்தியா எந்த தவறான முடிவும் எடுக்கவில்லை. தேச நலன் கருதியே (ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல்) செயல்பட்டு வருகிறது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துகிறது. சமீப காலமாக சீனா, பாகிஸ்தான் எல்லையில் நமக்கு அச்சுறுத்தல் அதிகமுள்ளது. எனவே, நாம் நம்மை வலுப்படுத்துவது அவசியம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.