அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
திண்டுக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணி ஆகியோரது வீடு மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று பெரியசாமியின் மகனும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் திண்டுக்கல்லில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரண்டு குழுவினர் சீலப்பாடியில் உள்ள பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏவுமான ஐ.பி. செந்தில் குமாரின் வீடு, திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராணியின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றன.
சட்டவிரோத பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மீண்டும் முறையாக ஒப்புதல் பெற்று முறையாக வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை
திண்டுக்கல் கோவிந்தபுரத்தில் உள்ள வீட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.