வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர். திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (பிப்-6) தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது கர்ப்பிணி பெண், ரயிலில் கழிவறைக்குச் சென்றுள்ளார்.
மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்தக இளைஞர், பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், கர்ப்பிணியை கே.வி. குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுள்ளார்.
ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் படுகாயமடைந்த பெண்ணிடம் ரயில்களில் குற்றங்களைச் செய்யும் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களைக் காண்பித்து விசாரித்தபோது, அந்த பெண் ஹேமராஜின் புகைப்படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து கே.வி.குப்பம் செல்லும் வழியில் ஹேமராஜை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டு ஹேமராஜ், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணை ரயிலில் வரவழைத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கும் 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் செல்போனை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட வழக்கும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.