திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!
தீவிரவாதத்தை எதிர்க்க திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதைப் பற்றி...
தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உயர்தர ஆலோசணைக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பலூசிஸ்தானில் நடைபெற்ற ரயில் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பற்றியும் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை பாரம்பரிய மற்றும் நவீன (டிஜிட்டல்) ஊடகங்கள் வழியாக எதிர்க்கொள்ளும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், அந்நாட்டில் பரப்பப்படும் தீவிரவாதக் கொள்கைகள் மற்றும் கதைகளை எதிர்க்க தேசிய நடவடிக்கை திட்டத்தின் மூலம் மக்களிடையே நாட்டுப் பற்றைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், பாகிஸ்தானின் மாகாணங்களில் ஒருங்கிணைப்பை உறுதி செய்து தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையிலான பிரச்சாரங்கள் பரவுவதைத் தடுக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், தீவிரவாத பிரச்சாரத்தை எதிர்கொள்ள தேசிய கருப்பொருள்களை உள்ளடக்கிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை உருவாக்கி அதன் வழியாக அந்நாட்டு இளம் தலைமுறையினருக்கு இடையே நாட்டுப் பற்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெளியாகும் தேசியவாத திரைப்படங்களை ஊக்குவிக்கவும் அங்கு பரப்பப்படும் பொய்யான தகவல்களை எதிர்க்கொண்டு சரியான தகவல்களை வழங்கவும் நவீன ஊடகங்களை பயன்படுத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 213 ஆப்கன் அகதிகளைத் தாயகம் கடத்திய பாகிஸ்தான்!