திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் அலெக்ஸ்(45).இவர் ஜவுளித் தொழில் புரிந்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா (35) ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆராதனா (9), ஆலியா (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாமல் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினா் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.
இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையிலும், படுக்கையறையில் குழந்தைகள் ஆராதனா, ஆழியா இருவரும் விஷம் சாப்பிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை உதவி ஆணையர் சதீஷ்குமார், ஆய்வாளர் வெற்றிவேல் அடங்கிய போலீசார் உடலையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸுக்கு ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள அவரது அம்மாவின் மருத்துவச் செலவு காரணாக ஏற்பட்ட கடன், தம்பியின் தொழிலுக்காக வாங்கி கொடுத்த கடனை திரும்ப கொடுக்க முடியாமல் போனதால் கடன் சுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, மேல கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் பகுதியில் அலெக்ஸ் புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார். இதற்கான கடன் தவணைத் தொகையை விக்டோரியாவின் தாயாருக்கு வந்த பென்சன் தொகையில் இருந்து செலுத்தி வந்துள்ள நிலையில், விக்டோரியாவின் தாயார் சமீபத்தில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கான கடன் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் கடன் சுமை அதிகரித்ததால் தம்பதியினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.