தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்றும் நாளையும் இரு நாள்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளதையடுத்து கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பலரும் போட்டி போடுவதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்ததாகக் கூறப்படும் நிலையில், தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.