தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களின் தாக்குதல்!
தஞ்சாவூர் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் வீட்டில் கட்டி இருந்த ஆறு ஆடுகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் வீட்டில் கட்டி இருந்த ஆறு ஆடுகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்காக விசாரித்து வருகிறது.
தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிக்கக் கூடாது. அதற்கென பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு மட்டுமே உணவளிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிப்பவா்கள் தண்டிக்கப்படுவா். தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்த பிறகு மீண்டும் அதே இடங்களில் விடலாம் என்பன உள்ளிட்ட உத்தரவு மற்றும் வழிகாட்டுதலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
தற்போது, தெரு நாய்கள் விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பிடிக்கப்படும் தெரு நாய்கள், மீண்டும் அதே இடங்களில் விடப்படக் கூடாது என்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் வீட்டில் கட்டி இருந்த ஆறு ஆடுகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி ஆன இவர் தனது வீட்டில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அங்கு 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாய்களை துரத்திவிட்டு சென்று பார்த்தபோது 6 ஆடுகள் இறந்து கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் அதிகயளவு தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் அனைத்து வீடுகளிலும் ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அடிக்கடி இவற்றை கடித்து விடுவதாகவும் குழந்தைகளை கூட துரத்துவதாகவும் வேதனை தெரிவிக்கும் மக்கள், இறந்த ஆட்டின் உரிமையாளருக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதேபோல் வெள்ளிக்கிழமை கும்பகோணத்தில் 50-க்கும் மேற்பட்ட வளர்ப்பு கோழிகளை தெருநாய்கள் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.