திருப்பத்தூர் அருகே பேருந்து விபத்து: 11 பேர் பலி, 35 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளது தொடர்பாக....
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 9 பெண்கள் மற்றும் ஓட்டுநர் உள்பட 11 பேர் பலியாகினர், 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே, காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (டிஎன் 39 என் 0198) அரசுப் பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (டிஎன் 63 என் 1776) அரசுப் பேருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில், பேருந்துகளில் இருந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உள்பட 11 பேர் பலியாகியுள்ளதாகவும், தற்போதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த கோர விபத்துக்கு திண்டுக்கல் சென்ற அரசுப் பேருந்து அதிவேகமாக சென்றதே காரணம் என கூறப்படுகிறது.