10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 5-ல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் 5 ஆம் தேதி தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக போராட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் 5 ஆம் தேதி தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச. ராமதாசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பாமக மற்றும் வன்னியர் சங்க தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், என் பாசத்துக்குரிய பாட்டாளி சொந்தங்களே!
பாமக தொடங்கியதில் இருந்து சமூக நீதிக்காகவும் அனைத்து தரப்பு மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டியும் பல போராட்டங்களை நடத்தி அதில் பல சமூக மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடும், உள் ஒதுக்கிடையும் பெற்றுத் தந்ததில் நமது பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாகும். நமது தியாக போராட்டத்தால் மிகப் பிற்பட்டோர் பட்டியலை உருவாக்கி 108 சாதிகளைக் கொண்டு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றோம், அதில் பெரும்பான்மையான சமூகமாக உள்ள நமது வன்னிய சமூகத்திற்கு என்று தனி உள் ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டு காலமாக நாம் கோரிக்கைகளை வைத்து போராடி வந்தோம்.
Advertisement
Advertisement
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, நமது வன்னியர் சங்கம் மற்றும் பாமக அறவழியிலான தொடர் போராட்டங்களையடுத்தும், நமது முன்னெடுப்புகளாலும் வன்னியர்களுக்கென்று 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, சட்டம் இயற்றி, அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால் அதற்குப் பின் வந்த திமுக ஆட்சிக் காலத்தில் சில விஷமிகள் நீதிமன்றங்களில் வன்னியர்களின் 10.5 இட ஒதுக்கீடுக்கு எதிராக தவறான தகவல்களை அளித்து தடையாணை பெற்று, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தடுத்து, நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் செய்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரி கணக்கீட்டை விரைவாக நடத்தி மக்கள் தொகை அடிப்படையில், வன்னியர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவிலான இடப் பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், அதுவரையில் 10.5 சதவீதம் தனி ஒதுக்கீட்டை உடனே பெறுகின்ற வகையில் நீதிமன்றத்தில் போதுமான தரவுகளை அளித்து தடையாணையை நீக்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தும் இதற்காக அறவழியில் போராட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை பலமுறை ஈர்த்தும் இருக்கின்றோம்.
ஆனால் நம்முடைய நியாயமான கோரிக்கைக்கும், கூக்குரலுக்கும், இன்றைய தமிழக அரசு, இதுநாள்வரை செவி சாய்க்கவில்லை என்பது, மிகவும் வருத்தத்துக்கும், கடும் கண்டனத்துக்கும் உரியது.
தற்போதைய திமுக அரசினுடைய ஆட்சிக் காலம் இன்னும் சில மாதங்களில், முடிவடைய இருக்கும் இந்த இறுதிக் கட்டத்திலாவது, நம்முடைய கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். அவ்வாறு நடக்காத பட்சத்தில் அதற்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் தலையாய கடமையாகும்.
எனவே, 'அனைத்து மக்களுக்குமான சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே நடத்து! " அதுவரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி ஒதிக்கீட்டை தடுக்கின்ற நீதிமன்றத் தடையாணையை போக்கி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்கிடு! என்கிற முழக்கங்களை முன் வைத்து தமிழக அரசை வலியுறுத்திடவும், சாதிவாரி கணக்கு எடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயத்தை, தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்து தெளிவுபடுத்தவும், வருகின்ற டிசம்பர் ஐந்தாவது நாள், காலை முதல் மாலை வரை, தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென்று வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவெடுத்திருக்கிறது.
இந்த போராட்டத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி சொந்தங்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Protest on December 5 demanding 10.5 percent reservation Ramadoss announces
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.