தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது குறித்து...
ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்று பாம்பன் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த தமிழக மீனவர்கள் 10 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
Advertisement
அங்கு மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டும் வரும் இலங்கை கடற்படை அதிகாரிகள், விசாரணைக்குப் பிறகு தமிழக மீனவர்கள் பத்து பேரையும், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகே கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது, கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது தவிர மீனவர்கள் மீதான தாக்குதல், துப்பாக்கிச் சூடு, இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களும் தமிழக மீனவர்களுக்கு பெருந்துயராக இருந்து வருகிறது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.