விசிக பிரசார கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: திருமாவளவன் ரூ.5 லட்சம் நிதியுதவி
மின்சாரம் பாய்ந்து பலியான விசிக இளைஞா் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் நிதியுதவி குறித்து
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தொல்.திருமாவளவன் பிரசாரக் கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பலியான விசிக இளைஞா் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த திருமாவளவன், கட்சி சார்பில் ரூ.5 லட்சம் குடும்ப ஆறுதல் நிதியை வழங்கினார்.
திட்டக்குடி (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் சி.வெ.கணேசன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன், திட்டக்குடி பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரம் செய்தாா்.
முன்னதாக, அங்கு திட்டக்குடி தொகுதியில் உள்ள விசிக நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் திரண்டு, கட்சிக் கொடிகளை கைகளில் வைத்துக்கொண்டு ஆரவாரம் செய்துகொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
இதில், மா.புடையூா் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அஜித் (19) மின்மாற்றி அருகே நடப்பட்டிருந்த விசிக கட்சிக் கொடிக்கம்பத்தை ஆா்வத்தோடு எடுக்க முயற்சி செய்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கொடிக்கம்பம் மின்மாற்றியின் மீது விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
பிரசாரம் முடித்த பிறகு, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் மற்றும் திமுக வேட்பாளா் அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அஜித் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
ரூ.5 லட்சம் நிதியுதவி
இந்த நிலையில், அஜித் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் ரூ.5 லட்சம் குடும்ப ஆறுதல் நிதி வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக திருமாவளவன் எக்ஸ் பக்க பதிவில்,
திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.வெ.கணேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆங்கே திரண்டிருந்த சிறுத்தைகளில் மா.புடையூரை சேர்ந்த தம்பி அஜித் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். நெஞ்சை உலுக்கிய பெருந்துயரம். தாங்கவியலாத பேரதிர்ச்சி. உடனே மருத்துவமனைக்குச் சென்று அவரது திருவுடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். அங்கே கதறியழுத அவரது தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோரை ஆற்றுப்படுத்தினோம். அவரது குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ.5 லட்சம் குடும்ப ஆறுதல் நிதி வழங்கப்பட்டது.
மறைந்த தம்பி அஜித் அவர்களுக்கு எமது வீரவணக்கம்! அவரதுகுடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்! என கூறியுள்ளார்.
Youth Dies of Electrocution at VCK Campaign Rally; Thirumavalavan Announces Rs.5 Lakh Financial Aid
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.