கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!
கணியூர் ஊராட்சியில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது குறித்து...
கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ‘பசுமை வாக்குச்சாவடி’கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்ட நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை மாவட்டம், கணியூர் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையம் எண் 70, 73 மற்றும் 74 ஆகிய இடங்களில் இந்த முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கணியூர் ஊராட்சி நிர்வாகம் இந்த பசுமை வாக்குச்சாவடிகளைச் சிறப்பாக அமைத்திருந்தது.
வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பூச்செடிகள், பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.
Advertisement
இந்த நிகழ்வில், ஊராட்சி செயலர் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தேர்தல் மண்டல அலுவலர் வாசுதேவன், 'பசுமை வனம்' அமைப்பின் பாலுசாமி, கவிதா ரஞ்சித் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டு வாக்காளர்களுக்குச் செடிகளை வழங்கினர்.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, மரம் வளர்ப்பது இயற்கைக் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த முயற்சிக்கு, அப்பகுதி வாக்காளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.