நுண்ணிய பார்வையற்ற தன்மை... மாநில விருதுகளைச் சாடிய சேரன்!
மாநில விருதுகள் குறித்து இயக்குநர் சேரன்...
இயக்குநர் சேரன் திரைத்துறைக்கான மாநில விருதுகளைச் சாடி பாதிவிட்டுள்ளார்.
தமிழக அரசின் தாமதித்த மாநில விருதுகளுக்கான பட்டியல் அண்மையில் வெளியானது. இதில், 2016 - 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களுக்கான சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது அறிவிப்பு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பெரும்பாலான தமிழ் படைப்பாளிகளுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பல திரைப்படங்களுக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை. மாறாக, சில மோசமான திரைப்படங்கள் தேர்வாகியிருந்தன.
இந்த நிலையில், இயக்குநர் சேரன் மாநில விருதுகள் குறித்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “பெண்களுக்கு இலவச பஸ்... வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை... திருமணத்திற்கு அரசு உதவி... இதையெல்லாம் செய்யும் அரசு... பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்...
வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த "திருமணம்" திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களைச் சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையைக் காட்டுகிறது.
அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது.
நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.