கல்வித்துறையில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).
இந்த புதிய நடைமுறையால், திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.17 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் டிஜிட்டல் முறையை ("ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்") அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் விடைத்தாள்கள் கணினியில் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2026 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்களை கணினி திரையில் பார்த்து திருத்தி மதிப்பெண் வழங்கும் ("ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்") எனும் புதிய டிஜிட்டல் முறையை வசதி அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது, மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை ஆசிரியர்கள் கணினி திரை வாயிலாக மதிப்பீடு செய்து மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த நடைமுறை 2026 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையால், திருத்தப் பிழைகள் குறைவதோடு ஆசிரியர்களுக்கு அலைச்சல் இருக்காது.
மொத்தப் பிழைகளை நீக்குதல், விரைவான மதிப்பீட்டை செயல்படுத்துதல் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளிலேயே தங்கி தங்கள் வழக்கமான பணிகளைத் தொடர அனுமதித்தல் போன்றவை இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் மதிப்பீட்டு முறை, தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்புக்கான தேவையை நீக்கும் என்றும், அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் மதிப்பீட்டுச் செயல்முறையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு செய்யும் பணியில் சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுவார்கள்.
விடைத்தாள் மதிப்பீட்டிற்கேற்ப, பள்ளிகளில் கணினிகள் வசதிகள் குறித்த விவரக்குறிப்புகள், நம்பகமான இணையதள இணைப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சாரம் ஆகியவற்றைக் கொண்ட கணினி ஆய்வகங்கள் இருப்பதை உறுதி செய்யுமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' பணிக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களே தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது "மதிப்பீட்டு செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சியாகக் கருதப்படும்" என்றும் பள்ளியின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது என்று இரண்டாவது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் மதிப்பிட்டு முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் இந்த முறை குறித்து நன்கு அறிந்துகொள்ள முடியும். புரிதலை மேம்படுத்த பயிற்சித் திட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல் வீடியோக்களும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பத்தாம் ஆம் வகுப்பு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கான மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில் பழைய நேரடி முறையே தொடரும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தங்கள் வாரியத் தேர்வை இரண்டு முறை எழுதும் வாய்ப்பை வழங்கவும் தயாராகி வருகிறது சிபிஎஸ்இ. இதனால் மாணவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த மூன்று பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதலாம், அதே நேரத்தில் முதல் தேர்வுகள் கட்டாயமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.