‘மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை’ - நமீபியா கேப்டன் குற்றச்சாட்டு!
‘மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை’ என நமீபியா கேப்டன் எராமஸ் குற்றம் சாட்டியுள்ளதைப் பற்றி...
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி விளையாடவுள்ள நிலையில், மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என நமீபியா கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்று இரண்டாமிடத்திலும், நமீபியா அணி ஒரு தோல்வியுடன் நான்காமிடத்திலும் இருக்கின்றன.
தில்லி அருண் ஜேட்லி திடலில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் இந்திய அணி - நமீபியாவை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
Advertisement
Advertisement
உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நமீபியா அணி, மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள முடிவெடுத்திருந்தது.
ஆனால், இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதால், நமீபியா அணிக்கு பிற்பகலில் நேரம் ஒதுக்கப்பட்டதாக அணியின் பயிற்சியாளர் கிரெய்க் வில்லியம்ஸ் தெரிவித்தார். ஆனால், வெள்ளிக்கிழமை அமீரகத்தை எதிர்கொள்ளும் கனடா அணி இந்தியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது.
இந்த நிலையில், தங்களால் மின்னொளியில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என நமீபியா கேப்டன் எராஸ்மஸ் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இதுகுறித்து கேப்டன் எராஸ்மஸ் பேசுகையில், “நமீபியாவில் அமைந்துள்ள கிரிக்கெட் திடல்களில் இரவு நேர மின்னொளியில் விளையாடும் வாய்ப்புகள் கிடையாது. அதற்கான போதிய நவீன கட்டமைப்புகள் அங்கு இல்லை.
அதனால் மின்னொளியில் விளையாடும் வாய்ப்புகள் எங்களுக்கு அமையவில்லை. இருப்பினும் எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நேபாள பிரீமியர் லீக், ஐஎல்டி20, உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய அந்த அனுபவம் பெற்றுள்ளனர்.
இந்தியா இரண்டு நாள்களாக மின்னொளியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு மாலை நேரத்தில் பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. நமீபியா மக்களுக்கே உரிய போராட்ட குணத்துடன் நாங்கள் இந்த ஆட்டத்தை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார் எராஸ்மஸ்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி), தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் பயிற்சி மேற்கொள்வதற்கான அட்டவணை ஜன. 27 ஆம் தேதியே கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், இரவு நேர பயிற்சி தொடர்பாக நமீபியா அணியின் கோரிக்கை நேற்றுமுன்தினம் (பிப்.10) வைத்ததால், கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Namibia was given an afternoon slot for practice on Wednesday as India went through its drills in twilight on both days leading up to the contest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.